கோடை நாடக விழா 2026: யாகாவாராயினும்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஏழாம் நாடகம்: ப்ரசித்தி க்ரியேஷன்ஸ் வழங்கிய 'யாகாவாராயினும்'. எழுத்து: அம்பி ராகவன். இயக்கம்: அம்பி ராகவன் & கிரிஷ் வெங்கட்.


ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.. தன் சாதி சார்ந்த இளைஞர்களை எப்படி தவறாக பயன்படுத்துகிறார் என்பதை தங்கள் கற்பனையில் நாடகமாக்கி உள்ளனர் அம்பி ராகவனும், கிரிஷ் வெங்கட்டும்.

தொல்.திருமாவளவனின் பெயர்... இப்படைப்பில் செல் அரிமா நம்பியென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் அம்பி ராகவனும், வீர் சுந்தராக கிரிஷ் வெங்கட், இளம் வயது வீர சுந்தராக ஆகாஷ் ஆகியோரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

ஆனந்த் ஸ்ரீனிவாசனை முதன் முறையாக ஓரளவேனும் பொருத்தமான கேரக்டரில் நடிக்க வைத்த பெருமை  இந்நாடக இயக்குனர்களுக்கு உண்டு. 

இந்த அதிசயத்தை நிகழ்த்தியதற்கு...

வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.

மொத்த நாடகத்தின் ஆணிவேராக இருப்பது கலைவாணர் கிச்சாவின் ஒளியமைப்பு மற்றும்  விஸ்வஜெய்யின் பின்னணி இசை. 

ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு Skin clothing எனப்படும் ஒப்பனை யுக்தி மூலம் சிறப்பாக ஒப்பனை செய்துள்ளார் பெரம்பூர் குமார்.

தன்னை சந்திக்க வரும் பிரபல தொழிலதிபர் வீர் சுந்தர்.. தன்னிடம் ஆணவமாக பேசிய ஒற்றை காரணத்திற்காக அவரை கொல்லும் அளவிற்கு வெறியாகிறார் அரசியல்வாதி அரிமா தம்பி. கொலை செய்ய இப்படி ஒரு அற்பமான காரணமா? 

'உங்களை ஏன் நீங்களே ஒடுக்கப்பட்டவர்களாக நினைக்கிறீர்கள்?' என ஒரு காட்சியில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதாவது வேறு யாரும் தலித் மக்களை ஒடுக்கவில்லையாம். அந்த மக்களே தங்களை அப்படி எண்ணிக்கொள்கிறார்களாம். ஆஹா.. வசனகர்த்தா அம்பி ராகவனின் அருமையான உருட்டு!!

தலித் சமுதாய தலைவரால்தான்.. அந்த இளைஞர்கள் ரவுடிகளாக ஆகிவிடுகிறார்களாம். அவர்களை படிக்க விடாமல் செய்வதும் அந்த தலைவர்தானாம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு.. மருத்துவ கல்லூரியில் சேர சமஸ்கிருத மொழி தெரிந்திருக்க வேண்டுமென்பதை கட்டாயமாக்கி.. குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வழி வகுத்தது யார்? 

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்க அடிப்படை காரணமென்ன? பனகல் ராஜா, தியாகராயர், அயோத்திதாச பண்டிதர், டி.எம். நாயர், டாக்டர் நடேசன் ஆகியோர் எதற்காக போராடினார்கள் என்பதை இரு இயக்குனர்களும் அறிந்திருக்கவில்லையோ?

திருமாவளவன் தன் சாதி இளைஞர்களை படிக்க விடாமல்.. அடியாட்களாக வைத்திருக்கிறார் என்றால்..

பாபர் மசூதியை இடித்தவர்கள் யாருடைய அடியாட்கள்?
வடமாநிலங்களில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட வைத்தவர்களை வளர்த்து விடுவது எந்த கட்சி?

கிறிஸ்துமஸ் நாளில்... சான்டா க்ளாஸ் உடையணிந்தோரை அடித்து, கிறிஸ்துமஸ் விற்பனை கடைகளை நொறுக்கிய பொறுக்கிகள் எந்த தலைவரால் ஏவப்பட்டார்கள்?

இதற்கு மட்டும் படிக்காத தற்குறிகள்  தேவைப்படவில்லையா? 

இதெல்லாம் அம்பி ராகவன் மற்றும் கிரிஷ் வெங்கட் எனும் படைப்பாளிகளுக்கு நிச்சயம் தெரியும். ஆனால் அதை மேடையில் சொல்ல இவர்களுக்கு தைரியம் இருக்காது. எந்த காலத்திலும் இருக்காது.

தன் கட்சியின் போராட்டம் வெற்றிபெற.. மைனர் வயதுடைய இளைஞர்களை தூண்டி விடுகிறார் அரிமா நம்பி. போராட்டத்தை வெற்றிபெற வைக்க மைனர் இளைஞர்கள் எதற்கு?

நம் நாட்டில்.. இளம் தலைமுறையினரில் ஒரு சாரார் படித்து முன்னேறாமல்.. க்ரிமினல்கள் மற்றும் அடியாட்களாக மாறுவதற்கு முக்கிய காரணம் தலித் தலைவர் மட்டும்தான் என மொத்த பழியையும் தூக்கி அவர்மீது போட்டுவிட்டார் வசனகர்த்தா அம்பி ராகவன்.

கேக்கறவன் கேனையா இருந்தா அக்வா ஃபீனா வாட்டர் பாட்டிலில் நெய் வடியுமாம்.

யாகாவாராயினும் - பாவம் செய்தவன் ஒருவன். பழியை சுமப்பது வேறொருவன்.

----------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.


No comments:

Post a Comment