பஞ்சாபகேசனின் மகள் கிருஷ்ணா.மருமகன் கந்தசாமி. இவ்வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் அருணாச்சலம்.
நிம்மதியாக வாழ்ந்து வரும் பஞ்சாபகேசனின் வாழ்வில் யாமினி எனும் இளம்பெண் வந்து புயலை கிளப்புகிறார். இப்பெண்ணை வரவைத்தது யார்? கந்தசாமிக்கும் யாமினி எனும் பெயருக்குமான பிணைப்பு என்ன? பஞ்சாபகேசன் என்ன நிலைக்கு ஆளாகிறார் என்பதை நகைச்சுவையாக கூற முயன்றுள்ளது இந்நாடகம்.
எழிச்சூர் அரவிந்தன், மாப்பிள்ளை கணேஷ், யாமினி தேவி, தேவிகா, ராம் ப்ரகாஷ், ப்ரஷாந்த் என இக்கூட்டணி 'கதைக்கு தேவையான' நடிப்பில் பாஸ் ஆகி விடுகிறது.
பஞ்சாபகேசன் வீட்டில் யாமினி நுழைவது முதல் க்ளைமாக்ஸ் வரை தொடரும் திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன.
கலைவாணர் கிச்சாவின் ஒளியமைப்பும் நாடகத்திற்கு வலு சேர்க்கிறது.
அரசியல்வாதியாக பழனி அறிமுகமாகும் காட்சியில் வரும் பேட்டி சம்மந்தப்பட்ட கேள்வி பதில் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கவில்லை.
அதன்பிறகு வரும் திமுக மற்றும் சசிகலாவை கிண்டல் செய்யும் வசனங்களில் சில நன்று.
முதுகெலும்புள்ள வசனகர்த்தாக்கள் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் செயல்கள் மற்றும் அதன் தலைவர்களை நையாண்டி செய்வார்கள்.
ஆனால் எழிச்சூர் அரவிந்தன் திமுகவை வன்மம் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிக்காமல் பம்முகிறார்.
இவருக்கு தெரிந்தது சின்னம்மா காமடி மட்டும்தான்.
அதேபோல கடந்த சில நாடகங்களில் ரெண்டு பொண்டாட்டிக்காரன் எனும் வசனம் மூலம் திமுக தலைவர் கருணாநிதியை கிண்டல் செய்து வருகிறார்.
அரசியல் தலைவர்களின் ஆட்சி ரீதியிலான செயல்களை நாடகங்களில் சாடலாம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து இப்படி ஏளனம் செய்வது முதிர்ச்சியற்ற, தரங்கெட்ட வசனகர்த்தாவின் வேலை.
மோடியின் மனைவி குறித்து பேச எழிச்சூர் அரவிந்தனுக்கு துணிச்சலும் இல்லை. முதுகெலும்பும் இல்லை என்பதையே இவரது ஒருதலைப்பட்ச எழுத்துகள் காட்டுகிறது.
இம்முறை சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாப்பிள்ளை கணேஷ்.
சிறப்பாக ஆரம்பித்து போகப்போக அறுவையாக முடியாமல்.. பெரியளவில் தொய்வின்றி இந்நாடகத்தை தப்ப வைக்கிறது மாப்பிள்ளை கணேஷின் இயக்கம்.
சிறந்த நகைச்சுவை நாடகமாக இல்லாவிட்டாலும்.. குறைந்தபட்ச உத்திரவாதம் உறுதி.
யாமினி என் கண்மணி - கிட்டத்தட்ட ஓகே கண்மணி.
----------------------
விமர்சனம்:
சிவகுமார்.