திரைப்பட இயக்குனர் ஆவதென்பது வீரா என்கிற வீராசாமியின் லட்சியம். தாய்மீது பேரன்பு கொண்டவன். எதிர்பாராத நிகழ்வொன்று அவனது வாழ்வை புரட்டிப்போடுகிறது. அதிலிருந்து மீண்டானா இல்லையா என்பதே கதை.
கதையின் நாயகன் வீராவாக விக்னேஷ், பல்லவியாக ஸ்வாதி, லலிதாவாக வந்த சிறுமி சுபா என நடிப்பில் யாரும் சொதப்பவில்லை.
மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்தது.. வெற்றிக்காற்றை சுவாசிக்க முயல்வதே வெற்றிக்கு எனும் கதையை தேர்வு செய்துள்ள விக்னேஷின் எண்ணம் பாராட்டத்தக்கது.
இதற்கேற்ற வசனங்களையும்.. பெருமளவு இயல்பாக எழுதியுள்ளார் ரத்னம் கூத்தபிரான்.
ஒரு சிறந்த பின்னணி இசையென்பது கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சி நடைபெறும் களம் மற்றும் சூழலையும் துல்லியமாக நமக்கு கடத்துவதாகும்.
அவ்வகையில் ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் விஸ்வஜெய். அன்பு, பதட்டம், குழப்பம், கோபம் என மாறி மாறி வரும் காட்சிகளை நேர்த்தியாக உள்வாங்கி.. அதற்கேற்ற இசையை தந்துள்ளார்.
இந்நாடகம் விஸ்வஜெய்யின் விஸ்வரூபம் என்பதில் சந்தேகமில்லை.
மயிலை பாபுவின் ஒளியமைப்பும் சிறப்பு.
நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்து.. நம்பிக்கையுடன் ஊட்டியில் இருந்து கிளம்புகிறான் வீரா. அத்துடன் முடித்திருந்தால் ஓரளவு நல்ல ஃபீல் குட் நாடகத்தை பார்த்த திருப்தியாவது இருந்திருக்கும்.
அதன்பிறகு... வீரா.. விருது வாங்குவது, பல்லவியின் அடுத்த பயணம் என நீட்டி முழக்கியது இழுவை.
சினிமாவில் எப்படி நாடகத்தனம் இருக்கக்கூடாதோ.. அதுபோல நாடகத்தில் சினிமாத்தனமும் தேவையற்றது.
ஆரம்பத்தில் நாடகம், பிறகு குறும்படம், இறுதியில் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு தந்து குழப்பியடித்துள்ளார் விக்னேஷ்.
நல்லபடியாக..முக்கால் கிணறு தாண்டிவிட்டு.. இறுதியில் சம்மர் சால்ட் அடித்து.. கிணற்றில் விழுந்து விட்டது விக்னேஷின் இயக்கம்.
வீரா - எதிர்பார்த்தது நாடகம். பார்த்தது திரைப்படம்.
---------------------------
விமர்சனம்:
சிவகுமார்.