கோடை நாடக விழா 2026: வீரா

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஒன்பதாவது நாடகம்: கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வழங்கிய 'வீரா'. வசனம்: ரத்னம் கூத்தபிரான். கதை மற்றும் இயக்கம்: விக்னேஷ்.


திரைப்பட இயக்குனர் ஆவதென்பது வீரா என்கிற வீராசாமியின் லட்சியம். தாய்மீது பேரன்பு கொண்டவன். எதிர்பாராத நிகழ்வொன்று அவனது வாழ்வை புரட்டிப்போடுகிறது. அதிலிருந்து மீண்டானா இல்லையா என்பதே கதை.

கதையின் நாயகன் வீராவாக விக்னேஷ், பல்லவியாக ஸ்வாதி, லலிதாவாக வந்த சிறுமி சுபா என நடிப்பில் யாரும் சொதப்பவில்லை.

மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்தது.. வெற்றிக்காற்றை சுவாசிக்க முயல்வதே வெற்றிக்கு  எனும் கதையை தேர்வு செய்துள்ள விக்னேஷின் எண்ணம் பாராட்டத்தக்கது. 

இதற்கேற்ற வசனங்களையும்.. பெருமளவு இயல்பாக  எழுதியுள்ளார் ரத்னம் கூத்தபிரான்.

ஒரு சிறந்த பின்னணி இசையென்பது கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சி நடைபெறும் களம் மற்றும் சூழலையும் துல்லியமாக நமக்கு கடத்துவதாகும்.

அவ்வகையில் ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர்  விஸ்வஜெய். அன்பு, பதட்டம், குழப்பம், கோபம் என மாறி மாறி வரும் காட்சிகளை நேர்த்தியாக உள்வாங்கி.. அதற்கேற்ற இசையை தந்துள்ளார். 

இந்நாடகம் விஸ்வஜெய்யின் விஸ்வரூபம் என்பதில் சந்தேகமில்லை.

மயிலை பாபுவின் ஒளியமைப்பும் சிறப்பு.

நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்து.. நம்பிக்கையுடன் ஊட்டியில் இருந்து கிளம்புகிறான் வீரா. அத்துடன் முடித்திருந்தால் ஓரளவு நல்ல ஃபீல் குட் நாடகத்தை பார்த்த திருப்தியாவது இருந்திருக்கும்.

அதன்பிறகு... வீரா.. விருது வாங்குவது, பல்லவியின் அடுத்த பயணம் என நீட்டி முழக்கியது இழுவை.

சினிமாவில் எப்படி நாடகத்தனம் இருக்கக்கூடாதோ.. அதுபோல நாடகத்தில் சினிமாத்தனமும் தேவையற்றது.

ஆரம்பத்தில் நாடகம், பிறகு குறும்படம், இறுதியில் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு தந்து குழப்பியடித்துள்ளார் விக்னேஷ். 

நல்லபடியாக..முக்கால் கிணறு தாண்டிவிட்டு.. இறுதியில் சம்மர் சால்ட் அடித்து.. கிணற்றில் விழுந்து விட்டது விக்னேஷின் இயக்கம்.

வீரா - எதிர்பார்த்தது நாடகம். பார்த்தது திரைப்படம்.

---------------------------

விமர்சனம்:
சிவகுமார்.


கோடை நாடக விழா 2026: மழையில் ஓர் இரவு

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் எட்டாவது நாடகம்: தியேட்ரிக்ஸ் ஸ்டேஜ் க்ராஃப்டர்ஸ் வழங்கிய 'மழையில் ஓர் இரவு'. எழுத்து: எஸ்.கௌரிசங்கர். இயக்கம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.


அனுப்புநர்:
சிவகுமார்
நாடக ரசிகர்
நாரத கான சபா கிளை
சென்னை.

பெறுநர்:
எஸ்.கௌரிசங்கர்
கதாசிரியர்
'மழையில் ஓர் இரவு' நாடகம்.

ஐயா வணக்கம்,

இந்நாடக கதாபாத்திரங்களின் பெயர்கள் அக்னி, அனுபவ், அகல்யா, அங்கமுத்து என 'அ'விலேயே தொடங்குகின்றன. இதில் வரும் சில ஊர் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் 'அ' தான்.

இதுபோன்ற அட்டகாசமான புதுமைகளை... தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்து.. அதற்கு காப்புரிமையையும் மறக்காமல் வாங்கி விடவும். 

1970 களின் இறுதியில் எழுதிய இக்கதையை.. பல்லாண்டுகள் பொக்கிஷம் போல் பாதுகாத்து...இன்று மேடையேற்றிய உங்களுக்கு 'நாடக கலா பொக்கிஷா' விருதினை தருவதே.. சரியான கௌரவம். 

----------------

பெறுநர்:
ஆனந்த் ஸ்ரீனிவாசன் 
நடிகர் மற்றும் இயக்குனர்.
மழையில் ஓர் இரவு நாடகம்.

ஐயா வணக்கம்,

'நவராத்திரி' படத்தில் மிலிட்டரியாக வரும் சிவாஜி.. கம்பீரமாக சிரிக்கிறேன் பேர்வழி என்று ராட்சத மோட்டாரை ஆன் செய்துவிட்டதுபோல சிரித்து நம்மை பீதியில் ஆழ்த்துவாரே.. அதெல்லாம் உங்கள் சிரிப்புக்கு முன்பு எம்மாத்திரம்?

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் நீங்கள் நகைத்தே.. நாடக ரசிகர்களுக்கு இடுக்கணை தரும் வித்தையை எங்கு கற்றீர்கள் என ஆச்சர்யத்தில் மூழ்கி களைக்கிறேன்.

நாடகத்தின் இறுதித்தருணங்களில் புது கெட்டப்பில் வந்த நீங்கள்.. உங்கள் தவடையை பெரிய சைஸ் வண்டு கடித்துக்கொண்டு இருந்தபோதும்.. அந்த கடும் வலியையும் பொறுத்துக்கொண்டு.. டெடிகேஷனோடு வசனங்களை உச்சரித்த விதம் இருக்கிறதே..

....அது  பரசுராமன் களைப்பாற.. தன் தொடையில் வண்டு கடித்தும்.. பொறுமை காத்த கர்ணனையும் மிஞ்சி விட்டது ஐயா.

நான் கூட..முதலில் அது ஒரு french beard getup என தவறாக எண்ணி விட்டேன். மன்னிக்கவும். 

நாடக உலகில் ஆஸ்கார் விருதை அறிவித்தால்.. அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளை உங்களைத்தவிர யாராலும் வெல்ல முடியாது. 

இந்நாடகத்தை நீங்கள் மீண்டும் அரங்கேற்றினால்.. அந்த சபாவை சுற்றியுள்ள கடைகளில் தக்காளி மற்றும் முட்டை விற்பனை கொடிகட்டி பறக்கப்போவது திண்ணம்.

இப்படிக்கு,
சிவகுமார்.
'நாடக ஆஸ்கார் நாயகன்'
ஆனந்த் ஸ்ரீனிவாசன் தலைமை ரசிகர் மன்றம்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர்புரம்.
தென்சென்னை.

மழையில் ஓர் இரவு - கோடை நாடக விழாவில் ஓர் கொலைக்குத்து.

------------------------

விமர்சனம்:
சிவகுமார்.