அனுப்புநர்:
சிவகுமார்
நாடக ரசிகர்
நாரத கான சபா கிளை
சென்னை.
பெறுநர்:
எஸ்.கௌரிசங்கர்
கதாசிரியர்
'மழையில் ஓர் இரவு' நாடகம்.
ஐயா வணக்கம்,
இந்நாடக கதாபாத்திரங்களின் பெயர்கள் அக்னி, அனுபவ், அகல்யா, அங்கமுத்து என 'அ'விலேயே தொடங்குகின்றன. இதில் வரும் சில ஊர் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் 'அ' தான்.
இதுபோன்ற அட்டகாசமான புதுமைகளை... தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்து.. அதற்கு காப்புரிமையையும் மறக்காமல் வாங்கி விடவும்.
1970 களின் இறுதியில் எழுதிய இக்கதையை.. பல்லாண்டுகள் பொக்கிஷம் போல் பாதுகாத்து...இன்று மேடையேற்றிய உங்களுக்கு 'நாடக கலா பொக்கிஷா' விருதினை தருவதே.. சரியான கௌரவம்.
----------------
பெறுநர்:
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
நடிகர் மற்றும் இயக்குனர்.
மழையில் ஓர் இரவு நாடகம்.
ஐயா வணக்கம்,
'நவராத்திரி' படத்தில் மிலிட்டரியாக வரும் சிவாஜி.. கம்பீரமாக சிரிக்கிறேன் பேர்வழி என்று ராட்சத மோட்டாரை ஆன் செய்துவிட்டதுபோல சிரித்து நம்மை பீதியில் ஆழ்த்துவாரே.. அதெல்லாம் உங்கள் சிரிப்புக்கு முன்பு எம்மாத்திரம்?
இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் நீங்கள் நகைத்தே.. நாடக ரசிகர்களுக்கு இடுக்கணை தரும் வித்தையை எங்கு கற்றீர்கள் என ஆச்சர்யத்தில் மூழ்கி களைக்கிறேன்.
நாடகத்தின் இறுதித்தருணங்களில் புது கெட்டப்பில் வந்த நீங்கள்.. உங்கள் தவடையை பெரிய சைஸ் வண்டு கடித்துக்கொண்டு இருந்தபோதும்.. அந்த கடும் வலியையும் பொறுத்துக்கொண்டு.. டெடிகேஷனோடு வசனங்களை உச்சரித்த விதம் இருக்கிறதே..
....அது பரசுராமன் களைப்பாற.. தன் தொடையில் வண்டு கடித்தும்.. பொறுமை காத்த கர்ணனையும் மிஞ்சி விட்டது ஐயா.
நான் கூட..முதலில் அது ஒரு french beard getup என தவறாக எண்ணி விட்டேன். மன்னிக்கவும்.
நாடக உலகில் ஆஸ்கார் விருதை அறிவித்தால்.. அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளை உங்களைத்தவிர யாராலும் வெல்ல முடியாது.
இந்நாடகத்தை நீங்கள் மீண்டும் அரங்கேற்றினால்.. அந்த சபாவை சுற்றியுள்ள கடைகளில் தக்காளி மற்றும் முட்டை விற்பனை கொடிகட்டி பறக்கப்போவது திண்ணம்.
இப்படிக்கு,
சிவகுமார்.
'நாடக ஆஸ்கார் நாயகன்'
ஆனந்த் ஸ்ரீனிவாசன் தலைமை ரசிகர் மன்றம்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர்புரம்.
தென்சென்னை.
மழையில் ஓர் இரவு - கோடை நாடக விழாவில் ஓர் கொலைக்குத்து.
------------------------
விமர்சனம்:
சிவகுமார்.
No comments:
Post a Comment