கோடை நாடக விழா 2026: கந்தன் கருணை

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஐந்தாவது நாடகம்: நாட்டிய நாத நாடக சங்கமம் வழங்கிய 'கந்தன் கருணை'. எழுத்து: எஸ்.தியாகு. இயக்கம்: ஸ்ருதி.

முருகன் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் ஸ்ரீநிவாச ஐயரின் மகன் ராமு. ஆசிரியராக இருக்கும் சுப்ரமணிய பிள்ளையின் மகள் சரிதா. இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. அதனால் இரு வீட்டாருக்கும் நடக்கும் பிரச்னைகள் என்ன? அது எங்கு போய் முடிகிறது என்பதே கதை.

ஸ்ரீநிவாச ஐயராக தனது பழுத்த நாடக அனுபவத்தின் மூலம் நெடிய வசனங்களை அழகுற பேசி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சிவப்ரசாத்.

கோபம், அழுகையென கூடுமானவரை நடித்துள்ளார் ஸ்ருதி.

தண்ணீர் கேன் போடும் நபராக வரும் பழனியின் நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆனால் பல காட்சிகளில் தன்னருகே இருக்கும் நடிகர்களை பார்த்து பேசுவதை விட... நாடகம் பார்ப்போரை பார்த்தபடி வசனம் பேசுவது மிக செயற்கையாக உள்ளது. பல நாடகங்களிலும் இதே பாணியை பின்பற்றி வருவது அலுப்பு.

இயல்பாக நடித்தால் தானாக கைத்தட்டல் விழும். கைத்தட்டல் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்தால்.. கதாபாத்திரம் அடிபட்டுப்போகும். புரிந்தால் சரி.

சரிதாவின் காதலனாக ஜோமோன் ஜானி. சுமாரான நடிப்பு. அண்ணாமலை எனும் கேரக்டரில் மாஸ்டர் பரம்வீர் சிங். சைகை மொழி காட்டி நடிக்கும் காட்சி சிறப்பு.

மகன் ராமுவின் காதலுக்கு  ஸ்ரீநிவாச ஐயர் பச்சைக்கொடி காட்டினாலும்.. சரிதாவின் தந்தை சிகப்பு சிக்னலை போடுகிறார்.

'நமக்கு குடும்ப கௌரவம், அந்தஸ்துதான் முக்கியம்' என மகளிடம் தந்தை கோபமாக பேச.. மறுபக்கம் 'நீ எனக்கு மகள் மாதிரிம்மா' என ஸ்ரீநிவாச ஐயர் தன்மையாக பேச.. இரு குடும்பத்திலும் வத்தி வைக்கும் வேலையை பழனி பார்க்க..

சரிதாவின் தந்தை காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை ஆதரிக்க.. பழனி போட்டு குடுக்க..

சரிதாவின் தந்தை மீண்டும் காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை மீண்டும் ஆதரிக்க.. பழனி மீண்டும் போட்டு குடுக்க..

சரிதாவின் தந்தை மீண்டும் மீண்டும் காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை மீண்டும் மீண்டும் ஆதரிக்க.. பழனி மீண்டும் மீண்டும் போட்டு குடுக்க..

சரிதாவின் தந்தை மீண்டும் மீண்டும் மீண்டும் காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை மீண்டும் மீண்டும் மீண்டும் ஆதரிக்க.. பழனி மீண்டும் மீண்டும் மீண்டும் போட்டு குடுக்க.. க்ளைமாக்ஸ் வந்து விட்டது.

ராமுவுக்கு திடீரென பேச்சு வர.. நமக்கு வாயை பிளந்து கொட்டாவி வர.. ஒரு வழியாக நாடகத்தை முடித்து வைத்த கந்தனின் கருணையே கருணை.

இந்த நாடகத்திற்கு கதை, வசனமெழுதிய எஸ்.தியாகுவும், இதை இயக்கிய ஸ்ருதியும் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சவசவ நாடக பாணியை குப்பையில் போட்டுவிட்டு.. 

... இருவரும் எழுத்து மற்றும் இயக்கத்திற்கான தரமான சம்மர் கோச்சிங் கேம்ப்பில் உடனே சேர்வது அவர்களுக்கும், நாடக ரசிகர்களுக்கும் மிகவும் நல்லது. 

கந்தன் கருணை - செக்குமாடு.

-------------------------------

விமர்சனம்:
சிவகுமார்