கோடை நாடக விழா 2026: கல்லபிராமம்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஆறாவது நாடகம்: PMG வழங்கிய கல்லபிராமம். எழுத்து, இயக்கம்: முத்துக்குமரன்.


ராணுவ வீரர்கள் நாட்டுக்காக என்ன தியாகம் செய்கிறார்கள் எனும் ஒற்றை வரிதான் கதை.

விநாயகமாக முத்துக்குமரன் மற்றும் கண்ணம்மாவாக ராதிகா ரவீந்திரன் பேசும் சில வசனங்கள் ஓரளவு சிரிக்க வைக்கின்றன. மேஜர் ஜஸ்வந்தாக சாய்ப்ரசாத் வசனங்களை தெளிவாக பேசியிருக்கிறார்.

அந்த காலத்தில் தேசியக்கொடி ஏற்றியவர்கள் ஜெயிலுக்கு போனார்கள். இப்போது ஜெயிலுக்கு போனவர்கள் கொடியேற்றுகிறார்கள், தேர்தல் சமயத்தில் எல்லா வீடும் 'ஓட்டு' வீடுதான் போன்ற சில வசனங்களில் முத்திரை பதிக்கிறார் முத்துக்குமரன்.

கோவில் பூசாரியாக ஆனந்த் ஸ்ரீனிவாசன். இவர் நடிக்கும் மற்ற நாடகங்களை போல.. இதிலும் மிக மிகச்சுமாராக நடித்துள்ளார். கதாபாத்திரமாக நம்பவைக்கும் அளவிற்கு இவர் நடிக்கவுள்ள முதல் நாடகத்தை காண.. இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டுமென தெரியவில்லை.

வசனம் பேசிவிட்டு இறுதியில் ஹா ஹா ஹாவென சன்னமாக ஒரு சிரிப்பு சிரிப்பதை தனது ட்ரேட் மார்க் என அவரே நம்புகிறார். அட ராமா!!

குகப்ரசாத்தின் இசை மற்றும் மயிலை பாபுவின் ஒளியமைப்பிற்கு போதுமான வேலை தரவில்லை.

ராணுவ வீரர் என்பதால் வீட்டில் இருக்கும்போது கூட எந்நேரமும் ராணுவ பேன்ட் அணிந்து கொண்டிருக்கிறார் சாய்ப்ரசாத். அரதப்பழசான சிந்தனை சாமியோவ்.

தேசப்பற்றுள்ள பெண் அகிலாவாக அனு சுரேஷ். ஏதோ ஓரிரு முறை தேசபக்தி மற்றும் ராணுவ வீரர்கள் பற்றி பேசினால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் இதையே பேசி அறுக்கிறார்.

நாடகம் ஆரம்பித்து 45 நிமிடம் வரை இப்படியே ஆளாளுக்கு பேசுவதால்.. treadmill இல் நின்றபடி ஓடுவது போல.. ஒரே இடத்தில் நிற்கிறது கதை. 

சுதேசி மாப்பிள்ளையை மட்டுமே மணமுடிப்பேன் என்கிறார் அகிலா (அனு சுரேஷ்). ஏன்.. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு தேசபக்தி இருக்காதா?

விநாயகம் (முத்துக்குமரன்) மகன் குமரனாக அனந்த்...  நடிப்பில் நிறைய முன்னேற்றம் தேவை. மனப்பாடம் செய்து ஒப்புவித்தால் மட்டும் போதாது. 

கோவை குண்டுவெடிப்பு நாளான பிப்ரவரி 14.. ஒரு கருப்பு தினம் என வசனம் எழுதியுள்ள முத்துக்குமரன்.. டிசம்பர் 6 ஆம் தேதி குறித்து வாய் திறக்கவில்லை. அதை சொல்ல அவருக்கு துணிச்சல் இல்லை.

ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து பலரும் அறியாத தகவல்களை இந்நாடகத்தில் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

ஆனால் இந்த மொத்த படைப்பும்.. ராணுவம் குறித்த தகவல்களை தொகுத்து வழங்கும் மேடை நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது. Where is the drama... மிஸ்டர் முத்துக்குமரன்? 

ராணுவ வீரர்கள்.... அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்கள். உயிரை பணயம் வைத்து காவல் காப்பவர்கள். சந்தேகமில்லை.

அதேபோல மருத்துவர்கள், சாக்கடை அள்ளும்  தொழிலாளிகள் என மற்ற துறையை சார்ந்தோரும் போற்றப்பட வேண்டியவர்களே.

ஆகவே எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களை எல்லைமீறி புனிதப்படுத்துவதை (romanticize செய்வதை) அந்த வீரர்களே விரும்ப மாட்டார்கள்.

வீட்டில் அமர்ந்து கொண்டு தேசபக்தி மற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தை பேசி புளகாங்கிதம் அடைபவர்கள்.. வெறும் பேச்சோடு நிற்காமல்..

..... தங்கள் வீட்டில் இருந்து ஒருவரை ராணுவத்தில் சேர்ப்பதே உண்மையான தேசபக்தி. முடியாவிட்டால்.. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வேலையிலாவது சேருங்கள். அதுவும் உயிர் காக்கும் உன்னத வேலைதான்.

கல்லபிராமம் - தீபாவளி துப்பாக்கி 

----------------------

விமர்சனம்:
சிவகுமார்.

No comments:

Post a Comment