கோடை நாடக விழா 2022 - மின்மணிகள்


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் இரண்டாவதாக அரங்கேறிய நாடகம் டம்மிஸ் ட்ராமாவின் மின்மணிகள். எழுத்து மற்றும் இயக்கம்: ப்ரசன்னா.    

நாடக ரசிகர்களுக்கு நடிகராக பரிச்சயமான ப்ரசன்னா, இதற்கு முன்பு மேடையில் குறுநாடகம் ஒன்றை இயக்கி இருந்தார். தற்போது முழுநீள மேடை நாடக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன் கோவிந்த்.  தெரிந்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை செய்வதால் தங்கள் மகனும் அப்படியொரு நிலைக்கு உயர வேண்டுமென்பது அவனது பெற்றோர்களின் ஆசை.

அவர்களின் எண்ணப்படி ஃப்ரான்ஸ் தலைநகரம் பாரீஸிற்கு செல்லும் வாய்ப்பு கோவிந்திற்கு கிடைக்கிறது. அவனும் தனது நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியான சந்தோசத்தில் இருக்கிறான். அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம். அதை எப்படி சமாளிக்கிறான் என்பதே கதை.

தற்கால மேடை நாடகங்களில் தொடர்ச்சியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் மிகக்குறைவு. குறிப்பாக இளைஞர்கள். அவ்வரிசையில் ப்ரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை. இங்கும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். 'என்னுடைய நடிப்பைப்பார். பிரமாதமாக இருக்கிறதா?' என ரசிகர்களை மனதில் வைத்து நடிக்காமல் கேரக்டரை மட்டுமே பின்பற்றி நடிப்பதே ஆகச்சிறந்த நடிப்பு. அதை தரும் பிரமாதமான நடிகர் இவர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

மின்சாரத்துறை அதிகாரி ஆனந்தனாக வரும் நரேனுக்கு தனது நடிப்பை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஸ்ரீதர், சுசித்ரா ரவி உள்ளிட்டோரின் பங்களிப்பும் நிறைவு. 

கோவிந்தின் நண்பன் மிதுன் எனும் கேரக்டரில் வரும் சாய் ப்ரசாத் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும்.. அவருக்கான வசனங்களில் ஒரு சிலவற்றை குறைத்திருக்கலாம். அவர் வேகமாக பேசுவதையும் கூட.  

தனியார் நிறுவனமும், அரசு நிறுவனமும் இணைந்து பணியாற்றினால் எப்படி இருக்கும்? அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன? அதன் ஊழியர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களும், புரிதல்களும் எவ்வாறு இருக்கும் என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

எதை நோக்கி கதை நகரும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு  திரைக்கதை, நம்பத்தகுந்த வசனங்கள், அதை அழகான நகைச்சுவையுடன் கூறியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கின்றன. அரசு ஊழியர்களிலும் நேர்மையாக உழைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இருப்பது மாறுபட்ட பார்வை. 

டீ என்பது பாமர மக்களுக்கானது, காஃபி என்பது உயர்குடிகளுக்கானது எனும் பிம்பம் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது. அந்த மாயையை இங்கே உடைத்திருக்கிறார் இயக்குனர். அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே இப்படியான காட்சியை சிந்திக்க இயலும்.

ஸ்ரீதர் மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன் அரங்க அமைப்பு நன்று. 

நகைச்சுவை என்பது வலிந்து வைக்கப்படாமல் இருக்க வேண்டும். அதை உணர்ந்து கதையோடு கலந்து சிறந்த முறையில் வசனங்களை எழுதியுள்ளார் ப்ரசன்னா.

காஃபி ஜோக், ரைமிங் - டைமிங் என புளித்தமாவு காமெடிகளை இன்னும் எழுதி வரும் சீனியர்களுக்கு மத்தியில் ப்ரசன்னாவின் பாணியில் எழுதப்படும் வசனங்கள் மிகப்பெரிய ஆறுதல்.   

இயக்குனராக இது முதல் நாடகம் என்பதால் வழக்கமான குடும்பக்கதையை எடுத்து தப்பிக்க நினைக்காமல் அல்லது பரீட்சார்த்த முயற்சி என்கிற பெயரில் ஆர்வக்கோளாறாக எதையோ எடுத்து நம்மை குழப்பாமல்... கச்சிதமான ரூட்டை பிடித்திருக்கிறார் ப்ரசன்னா.

ஆரம்பமே வெற்றி. இப்பயணம் தொடர வாழ்த்துகள்.  


மின்மணிகள் - தடையில்லா மின்சாரம்.  

-----------------------------------------------

விமர்சனம்: சிவகுமார்.  


4 comments:

  1. Thanks for your review Siva. Your passion for Tamil Theatre is wonderful. You are also an important member of our journey in Tamil Theatre.

    - Narendran, Dummies Drama

    ReplyDelete
  2. அருமை. உண்மை

    ReplyDelete
  3. நன்று ஐயா

    ReplyDelete