கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் எட்டாவதாக அரங்கேறிய நாடகம் ஓஹோ புரடக்சன்ஸ் வழங்கிய டைட்டில். எழுத்து மற்றும் இயக்கம்: ஸ்ரீவத்சன்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு இல்லத்தில் இரு பெண்கள் மட்டும் வசிக்கிறார்கள். இருவருமே திருமணமானவர்கள் என்றாலும், இவர்களின் கணவர்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போகிறார்கள். அவர்களைப்பற்றிய எந்தத்தகவலும் இல்லை. இந்த வீட்டை விற்று பங்கை பிரிக்க வேண்டுமென உறவினர் கோபால் என்பவர் கூற.. அதற்கு இவ்விருவரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
நீதிமன்றம் சென்றால் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால்.. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து சட்டப்பஞ்சாயத்து செய்ய முடிவு செய்கிறார்கள். தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தது?
நாடகத்தின் முக்கிய பலம்.. குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவரும் நடித்த விதம். லாவண்யா, ப்ரேமா சதாசிவம், பழனி, கார்த்திக் பட், சுப்பு, மஹேஸ்வர் உள்ளிட்ட எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர்.
மேடையின் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி ப்ரேமா சதாசிவம் பேசிய பல வசனங்கள் தெளிவாக காதில் விழவில்லை. உரக்க பேசுங்கள் அல்லது மைக் அருகே அமர்ந்தோ, நின்றோ பேசுங்கள் திருமதி. ப்ரேமா.
ரவுடி மணி எனும் கேரக்டரில் நடித்த பழனி என்பவர் வரும் முதல் இரு காட்சிகள் நல்ல காமடி. ஆனால் அதன் பிறகு அளவுக்கு மீறி பேசுவதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக நீதிபதி நடத்தும் விசாரணையில் இத்தனை குறுக்கீடு செய்ய வேண்டியதில்லை.
பெண்களுக்கு.. குறிப்பாக மருமகள்களுக்கு சொத்தில் பங்கு இருக்க வேண்டியதன் நியாயத்தை உணர்த்தும் நல்ல கதைக்களம். இந்து தர்மம், மனுதர்மம், மனுநீதி... மன்னிக்க மனு ஸ்ம்ரிதி ஆகியவற்றில் பெண்களுக்கு சமமான உரிமை தரப்படவில்லை என்று எடுத்துரைத்து லாவண்யா பேசும் வசனங்கள் அருமை.
பெண்ணடிமைத்தனத்தில் ஊறிப்போன பழமைவாத கோட்பாடுகளை சிறப்பாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது ஸ்ரீவத்சனின் வசனங்கள். Family Tree யை மேலே சென்று பார்த்தால்.. கீழே விழ வேண்டி வரும், குங்குமம் தர யோசிக்கும் பெண்கள், Faith vs Belief என யதார்த்த வாழ்க்கையை ஒட்டி ஸ்ரீவத்சன் எழுதியிருப்பவை..கைத்தட்டலை பெற முழுத்தகுதி பெற்றவை.
ஆங்காங்கே நகைச்சுவையும் சேர்ந்து ரசிக்க வைக்கிறது. அதிலும் மஹேஸ்வர் வந்த பிறகு.. இன்னும் நன்றாக.
மயிலை பாபுவின் ஒளியும், ஸ்ரீதர் மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன் அரங்க அமைப்பும் அருமை.
நிறைகள் இவ்வாறு இருக்க... குறைகள் யாவை?
தமிழ் நாடகம் எனக்கூறிவிட்டு பெரும்பாலும் ஆங்கில வசனங்களால் நிரம்பிய English Play போடுவது ஸ்ரீவத்சனின் நிரந்தர கொள்கை. இங்கும் அதுவே தொடர்கிறது.
Inception, Desperation, Perception என ஒற்றை வார்த்தைகள் ஒருபக்கம். Judgment is based on Karma and Dharma போன்ற ஏகப்பட்ட ஒருவரி வசனங்கள் மறுபக்கம். ஒரு சில இடங்களில் ஆங்கிலம் வருவதில் தவறில்லை. ஒரு சில இடங்களில் மட்டும்தான் தமிழ் வருகிறது. இதற்கு நேரடியாக ஆங்கில நாடகங்களையே அரங்கேற்றி விடலாமே.
பெரும்பாலான சபா நாடகங்களுக்கே உரித்தான ஆகம விதி என்ன? ஒன்று பாஜக சார்புத்தன்மை. மற்றொன்று திமுக எதிர்ப்பு. இதில் ஸ்ரீவத்சன் மட்டும் விதிவிலக்கா என்ன?
திமுக எம்.எல்.ஏ.வை குறிக்கும் அரசியல்வாதி கேரக்டரில் ஒருவர் வருகிறார். 'மைக் முன்னாடி மட்டும் ஐயர்களை திட்டுவோம். மற்ற நேரங்களில் அவர்கள் மீது மதிப்புண்டு' என்று பேசுகிறார்.
மைக் முன்னே இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய ஹெச்.ராஜாவை மனதில் வைத்து ஒரு கேரக்டரை உருவாக்க ஏன் தயக்கம்/பயம்? அப்படி செய்தால் அரங்கில் கைத்தட்டல் விழாது. இதுதான் காரணம்.
இது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடக்கும் பஞ்சாயத்து என்பதால் 'ஹைகோர்ட்டாவது, மயிராவது' என்று கொச்சையாக பேசிவிட்டு பிறகு நீதிமன்றத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மாவீரர் ஹெச். ராஜாவின் கேரக்டர் நன்றாக பொருந்தியிருக்குமே திரு.ஸ்ரீவத்சன் அவர்களே!!
இன்னொரு சீனில் 'இந்த அரசியல்வாதியை இவரை காவேரி ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும்' என்று பேசுகிறார் மஹேஸ்வர். உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் சேர்ந்த கருணாநிதியை கிண்டல் செய்வது எந்த வகை நாகரீகம்?
ஜெயலலிதா மற்றும் சோ ராமஸ்வாமி ஆகிய இருவருமே அப்பல்லோவில் இருந்ததை சுட்டிக்காட்டி வசனம் வைக்காமல் தடுத்தது எது? ஜெயலலிதா மீதுள்ள பயமா? உயிரோடு இருந்த காலத்திலும், இறந்த பிறகும் கூட ஜெயலலிதா எனும் தனிநபரையோ, அவரது ஆட்சியையோ விமர்சிக்க சபா நாடக படைப்பாளிகள் அஞ்சி நடுங்குவது ஏன்?
உக்ரைனில் போர் நடந்தால், பெட்ரோல் விலை ஏறினால், அக்னி வெயில் சுட்டெரித்தாலும்... அனைத்திற்கும் ஒரே காரணம் திமுக மட்டுமே. அப்படித்தானே? அடடா... உங்கள் நடுநிலையை எண்ணி புளகாங்கிதம் அடைகிறோம் ஐயா.
மனுதர்மம், மனுநீதி...மன்னிக்க. மனுஸ்ம்ரிதி போன்றவை அப்போதைய காலகட்டத்திற்கு சரியாக இருந்திருக்கலாம். இப்போதைக்கு அவை வெறும் ரெஃபரென்ஸ் மட்டுமே என்று லாவண்யா பேசும் வசனம் வருகிறது.
மனு ஸ்ம்ரிதி எனும் நூலை ஒரு நபர் எழுதவில்லை. வெவ்வேறு வெர்ஷன்களில் உலா வருகிறது. இது சாதிய வன்மம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டவைகளில் ஊறி திளைத்த நூல் என்பது மூளையுள்ள அனைவர்க்கும் தெரியும். அந்த நூலில் உள்ள உதாரணங்கள்:
* கணவன் குடிகாரன், சூதாடியாக இருந்தாலும் அவனுக்கு பணிவிடை செய்து கிடப்பதே மனைவியின் வேலை.
* தன்னை இழிவாக நடத்தினாலும், விபச்சாரியுடன் உறவு வைத்திருந்தாலும்... கணவனை தெய்வமாக மதித்தல் வேண்டும்.
'மனுஸ்ம்ரிதி போன்றவை அப்போதைய காலகட்டத்திற்கு சரியாக இருந்திருக்கலாம்' எனும் வசனத்தை நீலகண்ட சாஸ்திரியாக வரும் VPS ஸ்ரீராமன் பேசி இருந்தாலாவது பொருந்தியிருக்கும். பெண் சமத்துவம் பற்றி வாதிடும் லாவண்யா பேசுவது முற்றிலும் சரியற்றது.
பெண்ணடிமைத்தனம் பேசும் நூல்கள்... அந்த காலத்திற்கு மட்டுமல்ல. எந்த காலத்திற்கும் பொருந்தாதவை.
அதேநேரம்.. லாவண்யா பேசும் பெண்ணுரிமைக்கான இதர வசனங்கள் அனைத்துமே பாராட்டத்தக்கது. அதற்கு காரணகர்த்தாவாக ஸ்ரீவத்சன் செய்திருப்பது.. நிச்சயம் ஒரு புரட்சி என்பதில் ஐயமில்லை.
முதல் காட்சியில் வரும் நகைச்சுவை, பிறகு நடக்கும் விவாதங்கள், அதற்கு பொருத்தமான நடிப்பு என நன்றாகவே நகர்கிறது கதை. ஜானகிராமனாக மஹேஸ்வர் வந்தபிறகு சிரிப்பலையும் எழுகிறது.
இதற்குப்பின் கதையின் மையத்திற்கு நியாயம் செய்து அழுத்தமான க்ளைமாக்ஸ் இருக்குமென்று பார்த்தால்.. நீதிபதி வந்து சட்டுபுட்டென சில வார்த்தைகள் பேசி நாடகத்தை முடிப்பது.. புஸ்வாணம்.
பெண் சமத்துவம் பற்றி பேசும் சிறந்த வசனங்கள். இடையிடையே தரமான நகைச்சுவை. இது மட்டுமே போதுமென்று நினைப்போருக்கு இந்நாடகம் போதுமானது.
சீராக நகரும் திரைக்கதை, முழுமையான இயக்கம் எனும் அவசியமான விஷயங்களை எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம்.
இதோ... ஸ்ரீவத்சன் பாணியில்... என் பங்கிற்கு நான் படித்த சில ஆங்கில தத்துவங்கள்:
* Laughter is much more important than applause. Applause is almost a duty. Laughter is a reward – Carol Channing.
* A good drama critic is one who perceives what is happening in the theater of his time. A great drama critic also perceives what is not happening - Kenneth Tynan.
* Your Honour, Sorry for the interruption. This is only my introduction. During the cross examination, you will see my action cum direction, added with perfection. In the name of the witness, you are playing with the imitation. That’s my conception - T. Rajendhar, Movie: Oru thaayin Sabadham.
டைட்டில் - எதிர்பார்த்தது ஓஹோ. கிடைத்தது OK விற்கு சற்று கீழ்.
------------------------
விமர்சனம் - சிவகுமார்.